நீட் தேர்வு.. ரத்தானது கருணை மதிப்பெண்! திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் பார்ப்பது எப்படி?
டெல்லி: திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. கருணை மதிப்பெண்களை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பெண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720க்கு 720 எடுத்து முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த மே 5 ஆம் தேதி, நீட் தேர்வு காலதாமதமாக தொடங்கியது. காலதாமதம் காரணமாக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணானது தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
அதன்படி நாடு முழுவதும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு 7 மையங்களில் நடைபெற்றது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
மறு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் வழங்கப்படும். இருப்பினும், மறுதேர்வு எழுதாமல் தவிர்த்த மாணவர்களுக்கு ஏற்கனவே அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண் வழங்கப்படும். அதாவது கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்படாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும், நீட் தேர்வில் இயற்பியல் பகுதியில் கேட்கப்பட்டிருந்த 19வது கேள்விக்கு இரு பதில்கள் சரி என்று எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்டிஏ வெளியிட்ட விடைக் குறிப்பில் 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பழைய என்சிஇஆர்டி புத்தகத்தில் 2ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று குறிப்பிட்டுள்ளதால், 2ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் அளிக்கவேண்டும் என்று மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் பானர்ஜி தலைமையில் 3 பேர் கொண்ட இயற்பியல் பேராசிரியர்கள் குழுவை நியமித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே இதன் காரணமாக 2ஆவது ஆப்ஷனைத் தேர்வு செய்த மாணவர்கள் 5 மதிப்பெண்களை இழக்க நேரிட்டுள்ளது.
இன்று நீட் இளநிலை தேர்வில் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 720-க்கு 720 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 44ஆகக் குறைந்து உள்ளது.
தேர்வர்கள் https://exams.nta.ac.in/NEET/NEET2024SCRevised.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications