நாட்டை அதிர வைத்த நீட் கருணை மதிப்பெண்: 1563 மாணவர்களுக்கு இன்று மறு நுழைவுத் தேர்வு!
டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு இன்று மறு நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக 1563 மாணவர்கள் மே 5-ந் தேதி எழுதிய நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.
நீட், நெட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளை தேசியத் தேர்வு முகமை நிறுவனம் நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இதனால் தேசியத் தேர்வு முகமை நிறுவனத்தையே கலைக்க வேண்டும் என்பதும் கோரிக்கை.

நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாகின. இதுவரை இல்லாத வகையில் 67 பேர் 720-720 என முழு மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 7 பேரும் 720 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டது. இதனிடையே பல லட்சம் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 1563 பேருக்கு கருணை மதிப்பெண் அளித்ததாகவும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளும் வெளியாகின.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணையின் போது கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 பேருக்கான நீட் நழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்துவதாக தேசியத் தேர்வு முகமை உறுதி அளித்தது. இதனடிப்படையில் இன்று 1563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
முன்னதாக நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க மத்திய அரசு, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. மேலும் தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பிரதீப் சிங் கரோலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications