உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு.. யார் இவர்? காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48-வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று ஓய்வு பெற்றார்.
இவரை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்து வந்த என்.வி.ரமணா புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

என்.வி.ரமணா பதவியேற்பு
அதன்படி 48-வது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில் என்.வி.ரமணாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். என்.வி.ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை பதவியில் இருப்பார்

விவசாய குடும்பம்
தலைமை நீதிபதியாக பதவியேற்ற என்.வி.ரமணா 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் பொன்னாவரம் எனும் கிராமம் ஆகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்த என்.வி.ரமணா, அதன் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்பட்டார்.

நாட்டில் பிரச்சினை
தற்போதைய சூழ்நிலையில் என்.வி.ரமணாவின் பதவியேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்று யாருக்கும் கட்டுப்படாமல் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை என நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினையாக உள்ளது.

காத்திருக்கும் சவால்கள்
கொரோனா தடுப்பூசிகள், அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஏறக்குறைய பல மாநிலங்களின் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அறிவித்தார். ஆகவே முக்கியமான நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து நல்ல முறையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் என்.வி.ரமணாவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications