விசாரிக்கக் கூடாது..தள்ளுபடி செய்க..சுப்ரீம் கோர்ட்டில் பழனிச்சாமிக்கு செக் வைத்த பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிச்சாமி மனுவை விசாரிக்கக் கூடாது என்றும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அனல் பறந்து வரும் நிலையில் இரட்டை இலை யாருக்கு என்பதில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே பஞ்சாயத்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த தொகுதிக்கான இடைதேர்தலை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை முதல் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமைச்சர்கள் படை அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி, தேமுதிக, நாம்தமிழர் கட்சி, அமமுக கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. அதே போல ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் தங்கள் சார்பில் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈபிஎஸ் தரப்பிலான அந்த மனுவில், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று மீண்டும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நாளைய தினம் வர உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவிற்கு எதிரான புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிந்து விட்டது. அப்படியென்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எங்கள் வசம்தான் இரட்டை இலை சின்னம் உள்ளதாக கருத வேண்டி உள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ரஞ்சித் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் ஆன்லைன் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில், அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அதனால், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையாக கூறி வரும் நிலையில் அதற்கு செக் வைக்கும் வகையில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.