காதை கிழிக்கும் மரண ஓலம்.. எங்கே திரும்பினாலும் அழுகுரல்கள்.. ஒடிசா விபத்தில் 233 பேர் பலி - வீடியோ
டெல்லி: 233 பேரை காவு கொண்டுள்ளது ஒடிசா ரயில் விபத்து.. ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் கோர காட்சியும், அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்த காட்சியும் வெளியாகி உள்ளன.. எந்த பக்கம் திரும்பினாலும், மரண ஓலங்களை கேட்க முடிகின்றன.. அழு குரல்களும், கதறலும் அந்த பகுயில் எதிரொலித்தவாறே உள்ளது..
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

ரயில் விபத்து: பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதன் பிறகுதான், பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறது.
இதனையடுத்து பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயில் இந்த தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதுதான் விபத்தை, கோர விபத்தாக மாற்றியதற்கான காரணமாகும். இந்த யஷ்வந்த்பூர் ரயிலின் பெட்டிகள் விபத்தில் சிக்கி மூன்றாவது தண்டவாளத்தில் விழுந்துள்ளது. ஏற்கெனவே கோர விபத்தில் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மூன்றாவது டிராகில் வந்த சரக்கு ரயில் இந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டியின் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.
3 ரயில்கள்: இப்படி 3 ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையத்தை குறித்த நேரத்தில் அடையாததால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்க கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஏராளமான மீட்புப்படையினர் மற்றும், விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட பொதுமக்களும் இதில் இறங்கினர்.
தற்போது வரை சுமார் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஒடிசாவின் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
விபத்து நடந்தது காட்டுப்பகுதி என்பதால், உடனடியாக இந்த விபத்து பற்றி யாருக்கும் தெரியவரவில்லை.. ரயில் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்டேஷனுக்கு வராதது குறிது விசாரணையில்தான் விபத்து நடந்ததே தெரியவந்துள்ளது..
அதிர்ச்சி: விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாள பக்கவாட்டில் சிதறி கிடந்துள்ளன.. படுகாயம் அடைந்தவர்கள் நகர முடியாமல் ரத்த வெள்ளத்தில் முனகியபடி இருந்திருக்கிறார்கள்.. நொறுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கி பலர் வெளியேற முடியாமல் கதறியிருக்கிறார்கள்.. காயங்களுடன் ரயிலில் இருந்து வெளியேறியவர்கள் ரத்த வெள்ளத்தில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வெறித்த பார்வையுடன் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த கோர காட்சியும், அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.. எந்த பக்கம் திரும்பினாலும், மரண ஓலங்களை கேட்க முடிகின்றன.. அழு குரல்களும், கதறலும் அந்த பகுதியில் எதிரொலித்தவாறே உள்ளது.. தீயணைப்பு படையினரும், பேரிடர் மீட்பு படையினர், போலீசார் என மொத்த பேரும் பரபரப்பாக துரித மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்பதும், அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்வதுமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்..
வீடியோ: ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்துள்ளன.. 4 பகுதிகளாக உடைந்து தொங்கி கொண்டிருக்கின்றன.. போர்க்களம்போல் அந்த இடமே காட்சியளித்து காண்போரை கலங்கடித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications