பள்ளியில் குவிந்து கிடக்கும் சடலங்கள்.. தேடி அழையும் உறவினர்கள்.. ஒடிசாவில் இப்போது என்ன நடக்கிறது
டெல்லி: ஒடிசா ரயில் விபத்து தேசியளவில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கே உயிரிழந்தோரின் சடலங்களை உறவினர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் நேற்று நடைபெற்ற கோர ரயில் விபத்து சமீப காலங்களில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இருக்கிறது. இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

மீட்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாக ஏற்கனவே உயர்மட்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 288 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அபோல 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தோரின் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது உயிரிழந்தோரின் சடலம் வைக்கப்பட்டுள்ள இடம் எப்படி இருக்கிறது. அங்கே என்ன நிலை என்பது குறித்துப் பார்க்கலாம்.
இப்போது அங்கே உயிரிழந்தோரின் உடல்கள் பஹனகா உயர்நிலைப் பள்ளி வைக்கப்பட்டுள்ளது. அங்கே இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் நிலையில், அங்கே இப்போது உயிரிழந்தோரின் உடல்களை வைத்துள்ளனர். அங்கே உயிரிழந்தோரின் உடல்கள் தரையில் வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களில் இருக்கும் மொபைல்களுக்கு தொடர்ந்து கால்கள் வந்து கொண்டே இருக்கிறது.
தங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று அச்சத்தில் உறவினர்கள் தொடர்ந்து கால் செய்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரையும் மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களை அடையாளம் காணவும் மொபைல் ரிங்டோன்களே பயன்படுகிறது.
இந்த ரயிலில் அதிகம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களே பயணித்ததாகக் கூறப்படுகிறது. ரயிலில் பயணித்த உறவினர்களைத் தேடி பலரும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவுக்கு குவிந்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் இருந்தனர். அவர்கள் சென்னைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் கிராம மக்கள் சேர்ந்து இங்கே வந்துவிட்டோம். நான் ரயிலில் பயணித்தோரின் மொபைல் போன்களுக்கு கால் செய்தே அவர்களின் சடலங்களைக் கண்டுபிடித்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
விபத்து குறித்த தகவல் பரவியவுடன் இரவு 8 மணியவில் கோச்சில் இருந்த அனைத்து மொபைல்களுக்கும் கால் வரத் தொடங்கியதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது..
மீட்புப் படையினர் விரைந்து வந்துவிட்ட போதிலும், அங்கே ரயில் பெட்டிகள் சிதறியும் கவிழ்ந்தும் கிடந்ததால், காயமடைந்தோரை மீட்கக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சடலங்கள் சிதறிக் கிடந்ததை முதலில் பார்த்த போது அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications