என் பசங்க இந்தியர்கள்.. நான் ஏன் அங்க போகனும்? 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழும் பாக். பெண் கேள்வி!
புவனேஸ்வர்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த பெண், தற்போது நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருக்கிறார். தன் குடும்பத்துடன் ஒடிசாவில் வசித்து வரும் இப்பெண் தற்போது இப்படியான சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
இவருடைய கணவர், குழந்தைகள் என அனைவரும் இந்தியர்கள். அப்படி இருக்கும்போது நான் மட்டும் எப்படி பாகிஸ்தானுக்கு போவேன் என்று அப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பெண்ணின் பெயர் சாரதா பாய். 55 வயதாகும் இவர் கடந்த 1987ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அவருடைய தந்தை மற்றும் 6 சகோதரர்களுடன் வந்திருந்தார். அப்போது இவர்களுக்கு 60 நாட்கள் விசா வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சாரதா பாய் மட்டும் இங்கேயே தங்கிவிட்டார். ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்தில் வணிகர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஏறத்தாழ 35 ஆண்டுகளாக இவர் ஒடிசாவில்தான் வசித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து பேரக்குழந்தைகளையே பெற்றுவிட்டார் சாரதா பாய். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில்தான் மாவட்ட காவல்துறையிடமிருந்து அறிவிப்பு ஒன்று வந்தது. அதில், மத்திய அரசு எடுத்துள்ள விசா ரத்து நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் சாரதா பாய் நீண்ட கால விசா எதையும் வைத்திருக்கவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் சாரதா பாய் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் தங்கியிருக்க வழி வகுக்கும் வகையில் எந்த சிறப்பு அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. அத்துடன் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது பற்றி சாரதா பாய் கூறுகையில், "நான் இங்கு வந்து திருமணம் செய்து பேரக்குழந்தைகளையே பெற்றெடுத்துவிட்டேன். இப்போது பாகிஸ்தானுக்கு போ என்று சொன்னால் என்ன அர்த்தம்? எனக்கு அங்கு யாரையும் தெரியாது. போனில் கூட பேசியதில்லை. என் குழந்தைகள் இங்கேதான் இருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள். அப்படி இருக்கையில் நான் மட்டும் எப்படி இங்கிருந்து வெளியேற முடியும்? இந்திய குடியுரிமை கேட்டு நான் பலமுறை விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.
என் குழந்தைகள் குடும்பத்துடன் இங்கேயே இருக்க விரும்புகிறேன். இதுதான் என் வீடு. இந்தியாதான் என் தாய்நாடு. நான் எங்கு போக முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒடிசாவில் மட்டும் சுமார் 12 பேர் இந்த நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இல்லையெனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. எனவே இதற்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
முதற்கட்டமாக பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சாரதா பாய் போன்றோர் நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications