டெல்லி தேர்தல் ரிசல்ட்: இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியை வீழ்த்த முடியுமா
டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், ஸ்டார் தொகுதியாக கருதப்படும் 'ஓக்லா' தொகுதியின் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே தொகுதியை யார் கைப்பற்றுவது என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சிகளுக்கு இடையே போட்டி எழுந்திருக்கிறது.

கடந்த 1993 முதல் இந்த தொகுதி பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 8 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்திருக்கிறது. முதல் தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ்தான் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கிறது. ஆனால், 2015 முதல் இது ஆம் ஆத்மியின் கோட்டையாக மாறியிருக்கிறது.
கடந்த 3 தேர்தல்களை எடுத்துக்கொண்டால், காங்கிரஸ் ஒரு முறையும், ஆம் ஆத்மி இரண்டு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி சார்பில் 2 முறையும் அமனத்துல்லா கான் போட்டியிட்டு இருக்கிறார். இந்த முறையும் ஆம் ஆத்மி அவரை களம் இறக்கியுள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்த அளவில்,
2013- காங்கிரஸ் வெற்றி -ஆசிப் முகமது கான் -50,004 வாக்குகள் (36.34%)
2015- ஆம் ஆத்மி வெற்றி-அமனத்துல்லா கான் -104,271 வாக்குகள் (62.56%)
2020- ஆம் ஆத்மி வெற்றி-அமனத்துல்லா கான் -130,367 வாக்குகள் (66.03%)
ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி ஏராளமான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து கவனம் பெற்ற கெஜ்ரிவால், முதலமைச்சராக இருக்கும்போதே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் முதல்வராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அதேபோல மத்திய விசாரணை அமைப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

குற்றப்பத்திரிகையில் ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ இடம் பெறுவது வழக்கம்தான். ஆனால் அரசியல் கட்சியின் பெயர் முதல் முறையாக இதில் இடம் பெற்றது. இப்படி ஆம் ஆத்மி ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
மறுபுறம் பாஜகவுக்கு டெல்லி மேல் ஒரு கண் நீண்ட காலமாக இருந்து வருகிறது. என்னதான் மத்தியில் ஆட்சியிலிருந்தாலும் டெல்லியை கைப்பற்ற முடியவில்லையே என்று ஆதங்கம் இருந்து வந்தது. இதனை சரி செய்ய 2025 தேர்தல்தான் வாய்ப்பு என்ற கருதி, தேர்தல் பணியில் தீவிரம் காட்டியிருந்தது. எனவே இவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை இரண்டு தவிர, காங்கிரஸ் மற்றும் ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் இருக்கிறது என்பதால், வெற்றி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications