ஒரே நாடு ஒரே தேர்தல்- முதல் முறை நடந்த மின்னணு வாக்குப் பதிவில் திடீர் கோளாறு- அதிர்ச்சியில் பாஜக!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்புவது தொடர்பான வாக்கெடுப்பில் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் லோக்சபாவில் பாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது; லோக்சபாவிலேயே ஒரே மாதிரி தேர்தல் நடத்த முடியாதவர்களால் நாடு முழுவதும் ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இந்த மசோதவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் கடுமையாக எதிர்த்தனர். இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அதேநேரத்தில் தெலுங்குதேசம், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜேடியூ, ஜேடிஎஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தன.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை. இந்தப் பெரும்பான்மை இல்லை என்பது பாஜக கூட்டணி அரசுக்கு தெரியும். இதனால் லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி விரிவான விவாதம் நடத்த விரும்புகிறார் பிரதமர் மோடி; அதனையே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றனர் என்றார்.
இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பின் போது பாதி எம்பிக்கள் முன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், பாதிவு வாக்குச் சீட்டு முறை கடைபிடிக்கப்பட்டது. இறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப அதிக எம்பிக்கள் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது.

ஜனநாயகம் .
கூட்டாட்சி .
மக்கள் கருத்து .
மூன்றின் அடிப்படையையும் அறுத்தெரியும் சட்ட வரைவு.
"ஒரே தேர்தல்" என்பது தேர்தலையே ஒழிக்கும் பாசிச மனோபாவம் என்பதை அம்பலப்படுத்துவோம்!
ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்போம். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications