ஒரே நாடு ஒரே தேர்தல்:அனைத்து துறை செயலாளர் 'லீவ்’ கேன்சல்! பயணங்களுக்கு தடை-மத்திய பாஜக அரசு அதிரடி
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதால் அனைத்துறை செயலாளர்களின் லீவ்கள் கேன்சல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாம்; மேலும் அனைத்து துறை செயலாளர்களும் டெல்லியை விட்டு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 18 முதல் 22 வரை நடத்துகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல்- அதாவது லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
ஆனால் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் சாத்தியங்கள் குறித்தும் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.
இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஏதுவாக அனைத்து துறைகளின் செயலாளர்களின் விடுப்பையும் மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாம். அத்துடன் அனைத்து துறை செயலாளர்களும் டெல்லியை விட்டு வெளியே பிற மாநிலங்கள் செல்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியையும் அச்சத்தையும் உருவாக்குகின்றன. இத்திட்டம் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகள் வர வேண்டும். அதனடிப்படையில் ஆராய்ந்துதான் முடிவெடுக்கப்படும் என்றார்.
ஆனால் ஏற்கனவே நாடாளுமன்ற நிலைக் குழு, இந்திய தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், நிதி ஆயோக் ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தி அறிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்திருக்கின்றன. இருப்பினும் மத்தியில் ஆளும் பாஜக அரசு,, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் பிடிவாதம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications