'ஒரே நாடு ஒரே தேர்தல்’ - மத்திய அரசு ஜரூர்! முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது ஆந்திரா உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெறும். முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை தொடர்பான மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்- அதாவது லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது எனும் மத்திய பாஜக அரசின் திட்டத்துக்கு நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் இது தொடர்பாக நடத்திய கூட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இதனையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இந்தக் குழுவில் இடம் பெறும் உறுப்பினர் விவரங்களை மத்திய அரசு பின்னர் வெளியிட இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெறும் நிலையில் மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதில் படுமுனைப்பாக இருப்பதையே இந்த குழு அமைத்தது வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications