டெல்லிக்குள் நுழைந்த குரங்கு அம்மை..பீதியில் மக்கள்..அச்சம் வேண்டாம் என்கிறார் முதல்வர் கெஜ்ரிவால்
புதுடெல்லி: கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று பரவலில் இருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வராதநிலையில், குரங்கு அம்மை (Monkeypox) எனும் வைரஸ் நோய் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருகிறது. தற்போது இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. குறிப்பாக கடந்த 14-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள நபருக்கு இந்தியாவில் முதன்முதலாக நோய் பாதிப்பு ஏற்பட்டது.

கேரளாவில் 3 பேருக்கு பாதிப்பு
அதைத்தொடர்ந்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை உறுதியானதால், தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

குரங்கு அம்மை அறிகுறிகள்
குரங்கு அம்மை, மனிதர்களை தாக்கினால், குறிப்பாக காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் உள்ளிட்டவையே குரங்கு அம்மை பாதித்ததற்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது. தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நபருக்கு குரங்கு அம்மை
இந்தியாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல் மற்றும் தோலில் அசாதாரண அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அந்த இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ளாத இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பீதி அடைய தேவையில்லை
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அச்சப்படும் அளவுக்கு அவருக்கு பாதிப்புகள் இல்லை. நோய் பாதிப்பிலிருந்து தற்போது மீண்டு வருகிறார். நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எல்என்ஜேபி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக தனிவார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்கும் பணியில் நமது சிறந்த குழு ஈடுபட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இதுவரை குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தற்போது 75 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 4 பேர் மற்றும் தாய்லாந்தில் ஒருவர் உள்பட மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications