"ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு"... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் திடீர் சீர்திருத்த முழக்கம்!
டெல்லி: இந்து சமூக மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் சமமான மரியாதையை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்; இந்துக்களைப் பொறுத்தவரையில் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என்பதை ஏற்று செயல்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்து சமூகத்தில் ஜாதிய மோதல்கள், பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.இந்து சமூக மக்கள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

இந்து சமூக மக்கள், ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என பிரிவினையற்ற நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். நமது சமூக அமைப்பில் தலைகீழான மாற்றங்களை உருவாக்க நினைத்தால் அடிப்படையில் 5 மாற்றங்களை செய்தாக வேண்டும். குடும்ப மேலாண்மை, சமூக நல்லிணக்கம், சூழல் பாதுகாப்பு, சுய விழிப்புணர்வு, சமூக கடமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமாது தமது 100-வது ஆண்டு விழாவில் இத்தகைய மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டர்கள் அனைத்து சமூகத்தினரின் வீடுகளுக்கு செல்ல வேண்டும்; அனைத்து மக்களுடனும் உரையாட வேண்டும். நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளை முடிவுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மக்களை ஜாதிய அடிப்படையில், மத அடிப்படையில் பிரிக்கக் கூடியது; ஜாதிய வர்ண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மத்தைத் தூக்கி பிடிக்கக் கூடியது என்கிற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் தற்போது அனைத்து ஜாதி மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என்ற முழக்கத்தை முன்னெடுப்போம் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் இப்படி பேசுவது ஒன்றும் புதியது அல்ல; ஆனால் நடைமுறையில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் பரிவார அமைப்புகளும் சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்து ஜாதிய- மத பிளவுகளை மட்டுமே நம்புகின்றன என்கின்றன விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications