இனி ரிசர்வேஷன் டிக்கெட் இருந்தால்தான்.. நடைமேடைக்கு போக முடியும்! நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி
டெல்லி: மகா கும்பமேளா போவதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நெரிசலை கட்டுப்படுத்த புதிய விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன. அதன்படி, இனி ரிசர்வேஷன் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே நடைமேடைக்குள் நுழைய முடியும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கைள் மேற்கொள்ள சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது நாடு முழுவதும் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் ரயில் நிலையங்களில் 60ஐ தேர்ந்தெடுத்து நிரந்தர வெளிப்புற காத்திருப்பு பகுதிகளை உருவாக்குவது. புது தில்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா நிலையங்களில் இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திடீர் கூட்டம் காத்திருப்பு பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். ரயில்கள் நடைமேடையை வந்தடையும் போது மட்டுமே பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது நிலையங்களில் நெரிசலைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகளுக்கு மட்டுமே நடைமேடைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். முன்பதிவு டிக்கெட் இல்லாத அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் வெளிப்புற காத்திருப்பு பகுதியில் காத்திருப்பார்கள். அனைத்து அங்கீகரிக்கப்படாத நுழைவு இடங்களும் சீல் வைக்கப்படும். அனைத்து ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படும், இதனால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியும்.
ஊழியர்களுக்கான புதிய சீருடை கொடுக்கவும் யோசிக்கப்பட்டிருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் நெரிசல் சூழலில், ஊழியர்களை எளிதாக கண்டுபிடித்து அழைக்க முடியும். நிலைய இயக்குநருக்கு நிலையத்தின் திறனுக்கும் , இயங்கக்கூடிய ரயில்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப டிக்கெட் விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது எனில் அதில் அதிகபட்சமாக 1000 பேர் மட்டுமே பயணிப்பார்கள் என்று தெரிந்தால் அந்த அளவுக்கு மட்டுமே டிக்கெட்களை விநியோகம் செய்ய நிலையத்தின் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுகளை அமல்படுத்துவதன் மூலம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி டெல்லியில் அந்த சோக சம்பவம் நடந்தது. உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்தனர். ஒர மணி நேரத்திற்கு 1000 டிக்கெட்டுகள் என விற்பனையான அளவுக்கு கூட்டம் இருந்தது. இரண்டு சிறப்பு ரயில்கள் இதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரயாக்ராஜ் பெயர் கொண்ட மற்றொரு ரயிலுக்கான அறிவிப்பும் வந்தது. ஏற்கெனவே கும்பமேளா செல்ல நடைமேடையில் காத்துக்கொண்டிருந்த பயணிகள் உடனடியாக, மற்றொரு நடைமேடைக்கு சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். பலருக்கு காயம் ஏற்பட்டது. இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியது.
நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் ரயில்களை விட்டாலே சரியாகிவிடும். ஆனால் ரயில்வே துறையில் அவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே கூடுதல் ரயில்களை விடுவது சாத்தியமில்லாதது என சொல்லப்படுகிறது. எனவேதான் மேற்சொல்லப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த முடிவுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications