அந்த பயம்.. இனி தீவிரவாதிகள் 100 முறை யோசிப்பார்கள்.. பஹல்காமில் உயிரிழந்தவரின் அப்பா
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பஹல்காமில் உயிரிழந்த ராணுவ வீரர் வினய் நர்வால் அப்பா ராஜேஷ், இனி தீவிரவாதிகள் 100 முறை யோசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

அதன்படி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. உலக நாடுகள், எதிர்க்கட்சிகள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முக்கியமாக பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இந்த பதிலடியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இதைவிட சரியான முறையில் அஞ்சலி செலுத்த முடியாது. இந்திய ராணுவத்துக்கு நன்றி என்று கூறினர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில், கப்பல் படை லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தார். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால் கூறுகையில், "பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டபோது ஊடகங்கள் எங்களிடம் வந்து, அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது நான் அரசுமீது நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தேன்.
இன்றைக்கு அரசு எங்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது. இதுபோன்ற பதிலடி மிகவும் அவசியமானது. அப்போதுதான் தீவிரவாதிகள் இனி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த முன் வரமாட்டார்கள். இந்த தாக்குதல் மூலம் தீவிரவாதிகளின் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றும் என்று நம்புகிறேன். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்பது மிகவும் பொருத்தமான பெயர்.
பஹல்காம் தாக்குதலுக்கு தற்போது உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான செய்தி அனுப்பிவிட்டோம். இனி தீவிரவாதிகள் தாக்குல் நடத்துவதற்கு முன்பு 100 முறை யோசிப்பார்கள். எங்கள் மற்றும் எங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய பிரதமருக்கும், ராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.
வினய் நர்வால் தாய் ஆஷா கூறுகையில், "பஹல்காம் தாக்குதலுக்கு அரசு பதிலடி கொடுத்திருப்பது மிகவும் நல்ல விஷயம். எங்கள் குடும்பத்தினர், அனைத்து இந்திய மக்களும் அரசுக்கு உறுதுணையாக இருப்போம். தக்க பதிலடி கொடுக்கும்போது மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications