ஆடு, மாடு கூட ஏறாது.. ஈரானில் தப்பி டெல்லி வந்த மாணவர்கள்.. காஷ்மீர் அரசு அனுப்பிய பஸ்ஸால் கோபம்
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நடக்கிறது. இதையடுத்து ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை ‛ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது. முதற்கட்டமாக மத்திய அரசு 110 மாணவர்கைள மீட்டது. இதில் 94 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். இவர்களை மத்திய அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ள நிலையில் டெல்லியில் இருந்துகூட்டி செல்ல ஜம்மு காஷ்மீர் அரசு அனுப்பிய பஸ் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த பஸ்சில் ‛விலங்கு கூட போகாது. இந்த பஸ்சில் ஏறமாட்டோம்' என்று மாணவர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி உதவி எண்களை தனித்தனியே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஈரானில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் அருகே உள்ள அர்மேனியாவுக்கு வந்தனர். அங்கிருந்து மாணவர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ‛ஆபரேஷன் சிந்து' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஈரானில் படித்து எல்லை கடந்து அர்மேனியா வந்த 110 மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக விமானத்தில் அழைத்து வந்துள்ளது. இந்த 110 மாணவர்களும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று டெல்லியில் மாணவர்கள் இறங்கி அங்கிருந்து தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டனர். மொத்தமுள்ள 110 மாணவர்களில் 94 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். இவர்களை டெல்லியில் இருந்து அழைத்து செல்ல ஜம்மு காஷ்மீர் அரசு தனி பஸ்களை அனுப்பி இருந்தது.
இந்த பஸ்கள் மிகவும் அழுக்காக இருந்தது. இருக்கைகள் கிழிந்து இருந்தன. டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் 800 கிலோமீட்டர் தொலைவை கடக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மணிநேரம் முதல் 22 மணிநேரம் வரை நேரம் பிடிக்கும். இது போக்குவரத்து, காலநிலை உள்ளிட்டவற்றை பொருத்து மாறுபடும்.
இப்படியான சூழலில் ஜம்மு காஷ்மீர் அரசு மாணவர்களுக்கு கிழிந்த இருக்கைகள் கொண்ட அரசு பஸ்களை அனுப்பி உள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் மாணவர் ஒருவர், ‛‛பஸ்கள் மிகவும் மோசமான கண்டிஷனில் உள்ளது. இந்த பஸ்சில் விலங்குகள் கூட செல்லாது. இந்த பஸ்களில் எங்களால் செல்ல முடியாது. ஏனென்றால் எங்களின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய முடியது.
நாங்கள் இப்போது டெல்லியில் உள்ளோம். இதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை பத்திரமாக ஈரானில் இருந்து வெளியேற்றி டெல்லி அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இதுவரை எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு தேவையான பஸ்ஸால் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளோம்'' என்றார்.
இதுபற்றி அறிந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா மாணவர்களை ஜம்மு காஷ்மீருக்கு பத்திரமாக அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தரமான பஸ்சில் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில், ‛‛ஈரானில் இருந்து மீட்கப்பட்ட டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் திரும்பும் மாணவர்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். தரமான பஸ்சில் மாணவர்களை அழைத்து வர உத்தவரிட்டுள்ளார். ரெசிடென்ட் கமிஷனர் ஜம்மு காஷ்மீர் சாலை போக்குவரத்து கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு டீலக்ஸ் பஸ்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications