குற்றத்தை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகள் தப்ப முடியாது - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல்
டெல்லி: பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. கொடூர தாக்குதலை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் என 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. முப்படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது. ஆனாலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நாடு ஆதரவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு தப்ப முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது, அப்பாவி மக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்திவிட்டு தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications