ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. மத்திய அரசுக்கு அறிவுரை நல்குமாறு வலியுறுத்தல்..!
டெல்லி: புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் விவாதமின்றி, உரிய ஆலோசனையின்றி இந்த சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாக அவர்கள் புகார் அளித்தனர்.
மேலும், புதிய விவசாய சட்டங்களை திரும்பபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விவசாயிகள்
டெல்லி சலோ என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து; தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள்
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்திஎம்.பி., தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்பி., தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சரத்பவார், எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்தனர்.

நீர்த்துப்போகும்
அப்போது, "2018ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்திலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி அளித்துவிட்டு, அந்த வாக்குறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு'' என ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டன.

விளக்கிக் கூறல்
மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை, வணிகர்கள் கேட்கும் விலைக்கு விற்கும் நிலையில் இருக்கிறார்களே தவிர, விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இச்சட்டத்தின் மூலம் கிடைக்காது என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.

வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அறிவுரைகள் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.