என்னது பெரும்பான்மை ஆட்சியா? ஜனாதிபதி உரைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு.. பரபர நாடாளுமன்றம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.

நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது,
"மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். 2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று கூறினார். இதற்கு எதிரக்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக மொத்தமாக 240 தொகுதிகளை மட்டுமே தனியாக ஜெயித்திருக்கிறது. ஆட்சியமைக்க 271 தொகுதிகளை வெல்ல வேண்டும். எனவே பாஜக நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் மைனாரிட்டி ஆட்சி என்று விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் குடியரசுத் தலைவர், "பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று கூறியிருந்ததை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் எதிர்ப்பு முழக்கமிட்டனர். அதேபோல, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையை அம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.
"நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை எதிர்த்து நாங்கள் மாநிலங்களவையில் போராட்டம் மேற்கொள்கிறோம். நாங்கள் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கிறோம். நாட்டின் உயரிய இடத்தில் குடியரசுத் தலைவரும், அரசியலமைப்பும் உள்ளது. ஆனால், நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம்" என்று கூறி ஆம் ஆத்மி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications