லோக்சபாவில் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு மசோதா தாக்கல்- கச்சத்தீவை முன்வைத்து திமுக வெளிநடப்பு!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று பகல் 12 மணிக்கு சர்ச்சைக்குரிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக கச்சத்தீவு குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் லோக்சபாவில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று பகல் 12 மணிக்கு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும் போது , கச்சத்தீவு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் லோக்சபாவில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக டெல்லியில் நேற்று இரவு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விசிக, ஆர்ஜேடி உள்ளிட்ட "இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தோற்கடிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்போம்; ஆனால் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்போம் என்றார். சிபிஎம் தலைவர் ஜான் பிரிட்டாஸும், இந்த மசோதாவை முற்று முழுதாகவே நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என்றார்.

நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்பதால் பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம் , ஜேடியூ, ஆர்ஜேடி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டவிரோதமானது; இஸ்லாமியர்களின் வக்ஃபு வாரிய சொத்துகளை கைப்பற்ற நினைக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. இதனால் இந்த மசோதாவை மிக கடுமையாக எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள்.













Click it and Unblock the Notifications