ரிசல்ட் வர 6 நாள் ஆனாலும் பரவாயில்லை.. 50% ஒப்புகை சீட்டுகளை எண்ணுங்க.. எதிர்க்கட்சிகள்
டெல்லி: மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாள்கள் ஆனாலும் பிரச்னை இல்லை என எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா உள்படசில மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகை சீட்டுகளை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும், சட்டமன்ற தொகுதியிலும், தலா ஒரு தேர்தல் வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அவர்கள் தாக்கல்செய்த மனுவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளையாவது எண்ண வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் கூறுவது போல், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாக 5.2 நாள்கள் ஆகும் என தெரிவித்துள்ளது.
கூட்டணியா இது.. வெறும் சீட்டணி.. நாட்டை பிடித்துள்ள சனி.. ராமநாதபுரத்தில் போட்டு தாக்கிய சீமான்
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள், 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்படுமானால், 5.2 நாள்கள் (6 நாள்கள்) தாமதம் ஆனாலும் பரவாயில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் தேர்தல் முடிவு தாமதத்தை குறைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.