"முழு பொய்கள்.!" ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் போடும் திட்டம்
டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும்பாலும் முடங்கியே வருகிறது. ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் நரவானே புத்தகத்தை ராகுல் காந்தி குறிப்பிட்ட முயன்றபோது, அதை ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
அதைத் தொடர்ந்து அவை முழுமையாக முடங்கி வருகிறது. இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற விதிகளின்படி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 14 நாட்கள் முன்பு காலவகாசம் தரப்பட வேண்டும்.
எனவே, இது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாம் பாதி மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..
ஓம் பிர்லா
ஓம் பிர்லாவுக்கு எதிராக மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்து இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ளனர். ராகுல் காந்தியை கடந்த வாரம் பேச அனுமதி மறுத்தது முதல் காரணம். அங்கீகரிக்கப்படாத ஆவணம் என ராகுலுக்கு அனுமதி மறுத்த சபாநாயகர், அதேபோல வெளியாகாத புத்தகத்தின் பாயிண்ட்டை பேச பாஜக எம்பிக்கு மட்டும் அனுமதி கொடுத்தார். அது இரண்டாவது காரணம். அதேபோல பெண் எம்பிக்களுக்கு எதிரான சபாநாயகர் குற்றச்சாட்டைக் கண்டித்து என 3 காரணங்களை முன்வைத்துள்ளனர்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் இன்றும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது. இன்று காலை கூட மக்களவை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியதால், காலை அமர்வில் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.. கடந்த வாரம் முதலே இந்த விவகாரத்தில் மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் தனது பேச்சை ரத்து செய்திருந்தார்.
அனுமதி மறுப்பு
2020 லடாக் சீனா எல்லைப் பிரச்சினை குறித்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே புத்தகத்தில் இருந்து சில பாயிண்டுகளை ராகுல் காந்தி படிக்க சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தினர். ஆனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் எதிர்க்கட்சிகள் செயல்பாட்டை விமர்சித்தனர். இவர்களுக்குச் சபாநாயகர் ஓம் பிர்லா ஆதரவளித்தார்.
நரவானே புத்தகம்
நரவானே புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்குப் பாதுகாப்புத் துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது அங்கீகரிக்கப்படாத ஆவணங்கள் நாடாளுமன்றப் பதிவேட்டின் ஒரு பகுதியாக ஆக முடியாது என்று மத்திய அரசுத் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, தான் சொல்லப்போகும் கருத்துகளுக்குப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். இருப்பினும், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
என்ன நடந்தது?
கடந்த வியாழக்கிழமை பிரதமர் பேசவிருந்த நிலையில், இப்போதும் லோக்சபாவில் மோதல் ஏற்பட்டதால் அவை முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது. பிரதமரைக் குறிவைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்பாராத செயலைச் செய்ததாகவும் அதன் காரணமாகவே அவை ஒத்திவைக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார்.
அதாவது அன்றைய தினம் ஒரு சில பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை (அவர் பிரதமர் அங்கு இல்லை) சுற்றி வளைத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தான் பிரதமர் மீது தாக்குதல் நடத்த முயற்சி என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இதை பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். பாஜக முழுப் பொய்களைச் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications