ஊழியர்கள் பற்றாக்குறை.. முக்கிய முடிவை எடுத்த ரயில்வே வாரியம்.. வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி: ரயில்வே துறையில் நிலவி வரும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வேயில் ஓய்வுபெற்ற 65 வயதுக்கு உட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்காற்றி வருகிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு குறைந்த செலவிலும், எளிதில் செல்வதற்கும் ரயில் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி உணவு, வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்திற்கும் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தொடர்ந்து ரயில் விபத்து சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் வகையில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்கு உட்பட்ட நபர்களையும் மறு நியமனம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையிலான பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓய்வு பெற்றவர்களின் உடற்தகுதி மற்றும் அவர்களின் கடை ஐந்து ஆண்டுகால பணிகளின் நடத்தை ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோர் இரண்டு ஆண்டுகள் வரையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்ற முடியும். அவர்களின் வேலை செயல்பாடுகளைப் பொறுத்து பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது. மறு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத் தொகை மட்டும் கழிக்கப்பட்டு அவர்கள் இறுதியாக பெற்ற மாத ஊதியம் வழங்கப்படும்.
பயணப்படியும் வழங்கப்படும். ஆனால், சம்பளம் உயர்த்தி வழங்கப்பட மாட்டாது என்றும், ஓய்வுபெற்ற ஊழியர்களை மறு நியமனம் செய்யும் செயல்பாடுகளை மண்டல மேலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் சமீபகாலமாக தொடர்ந்து விபத்து சம்பவங்கள் நேரிட்டு வருகின்றன.
இந்த விபத்து சம்பவங்களுக்கு ஊழியர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ரயில்வே துறை அனைத்து மண்டலங்களிலும் தேவையான காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. நாட்டில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் ரயில்வே காலிப் பணியிடங்களில் நிரப்புவது முறையல்ல என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications