இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் முழக்கம்… ராஜ்யசபா ஒத்தி வைப்பு
Recommended Video

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.மத்திய அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து, மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

4 மணி நேர விவாதத்துக்கு பிறகு, இரவு 10 மணியளவில், இடஒதுக்கீட்டு மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். யாரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்க வில்லை.எனவே, மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்பிதுரை உள்ளிட்ட அஇதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.மசோதா நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத ஆதரவுடன் மசோதா நிறைவேறி இருப்பதாக கூறினார்.
இந் நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அவையில், சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். இதற்கிடையே, அவை அமர்வு முன் அறிவிப்பு இன்றி நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டடனர்.
அமைச்சர் சபாநாயகர் இருக்கை முன்பு திரண்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தியும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோது இதே நிலை நீடித்தது. இதையடுத்து ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications