எடப்பாடி கையில் அதிமுக.. ஆனா.. அங்கதான் ஒரு பெரிய 'செக்'.. இன்னொரு வாய்ப்பு கொடுத்த சுப்ரீம் கோர்ட்!
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ள நிலையிலும் ஒரு ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதிமுக அதிகார மோதல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம், எடப்பாடி பழனிசாமியின் கையில் செல்கிறது அதிமுக. பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ் நீக்கமும் செல்லும் என்ற நிலை வந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட் தீர்ப்பு உறுதியானது
தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியதை விசாரித்ததாகவும், எதிர் தரப்பினரது கருத்துகள் அனைத்தும் முழுமையாக கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டனர்.

ஓபிஎஸ் நிலை கேள்விக்குறி
உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக. அதேபோல், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லுபடியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், ஓபிஎஸ்-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு டெஸ்ட்
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எனினும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு 'டெஸ்ட்' காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications