உயர்சாதியினருக்கு 10 சதவிகிதம் ஒதுக்கீடு... முதன் முறையாக ரயில்வேயில் 23,000 பணியிடங்கள்
டெல்லி : ரயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வேயில் ஏற்கனவே 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், 2021 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 4 லட்சம் பேர் ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டும் என்றும், ஓராண்டுக்குள் பணிநியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 91 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்றும், இந்த பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 34 ஆயிரம் இடங்களும், பழங்குடியினருக்கு 17 ஆயிரம் இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 62 ஆயிரம் இடங்களும் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவிகித நடைமுறையின் கீழ் முதல் முறையாக 23 ஆயிரம் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.