29,000 குளிர்பதன கிடங்கு.. 45,000 ஐஸ் ரெப்ரிஜிரேட்டர்.. தடுப்பூசி சப்ளைக்கு விறுவிறு ஏற்பாடுகள்
டெல்லி: கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 29000 குளிர்பதன கிடங்கு, 45,000 ஐஸ் ரெப்ரிஜிரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. எனவே யாருக்கு எப்படி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற திட்டமிடலில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.
தடுப்பூசி போட விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய விவரங்களையும் மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், தடுப்பூசியை உரிய வகையில் கொண்டு சேர்க்க 29 ஆயிரம் குளிர்பதன கிட்டங்கிகள் தயார் நிலையில் உள்ளன. 45 ஆயிரம், ஐஸ் லைன் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன.
240 நடமாடும் கூலர்கள், 70 நடமாடும் பிரீசர்கள், 41 ஆயிரம் டீப் ப்ரீசர், 300 சோலார் ரிப்ரிஜிரேட்டர் தயார் நிலையில் உள்ளன. 23 அமைச்சரகங்கள் இணைந்து தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளன.
ஆஷா தொழிலாளர்களுக்கும், பிற சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசியை பத்திரமாக பாதுகாப்பது, இடப் பெயர்வு செய்வது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி லேசான பின்விளைவுகளை கொடுக்க கூடும். இதை எதிர்கொள்ளவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் போன்ற ஏற்கனவே, தடுப்பூசி திட்டத்தை துவங்கிய நாடுகளில், லேசான பின் விளைவுகள் ஏற்பட்டன. முதல் நாளிலேயே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.