கொரோனாவால் 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்... உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்..!
டெல்லி: கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, பிரேஸில் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 10 நாடுகளில் மட்டும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதோடு அந்நாட்டில் இதுவரை 6 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த இரு நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதேபோல் மெக்சிகோவில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பெருவில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், கொலம்பியா, உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை, ஒரு மில்லியன் மக்கள்தொகை என்ற அடிப்படையில் எனக் கணக்கிடும் போது குறைவாக கருதப்படுகிறது. 10 லட்சம் பேரும் 287 என்ற வீதத்தில் தான் இங்கு உயிரிழப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதேவேளையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1000 முதல் 2000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications