40 பேருக்கு டெல்டா+ கொரோனா.. தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. வார்னிங் அனுப்பிய மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இந்தச் சூழலில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா நாட்டில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது மூன்றாம் அலையை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

40 பேர்
இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 40 கொரோனா நோயாளிகளுக்கு உருமாறிய டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 21 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 6 பேருக்கும், கேரளா & தமிழ்நாட்டில் 3 பேருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகாவில் இரண்டு பேருக்கும் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், காஷ்மீரில் தலா ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா
இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகையை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும்கூட அனைத்து மாநிலங்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இதுவரை இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களும் தங்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வாபஸ் பெற்று வருவதால் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விகே பால்
இது குறித்து தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் வி கே பால் கூறுகையில், "அனைத்து மாநிலங்களுக்கும் இது குறித்து வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளோம். ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் தான். இருந்தாலும் அதனை அதிக கவனத்துடன் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை புதிய தலைவலியை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

9 நாடுகள்
இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை அமெரிக்கா பிரிட்டன், உட்பட இதுவரை 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வகை கொரோனாவை போலத் தான் என்றாலும் கொரோனா வைரசின் வெளியில் இருக்கும் புரத ஸ்பைக்கில் கூடுதல் மாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை வேகமாகப் பரவுமா, தீவிர பாதிப்பை அதிகப்படுத்துமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications