செம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புகளில், சுமார் 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவையாகும்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 2.74 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 1.48 லட்சமாக இருந்தது. அதாவது இந்த ஆண்டு மட்டும் கொரோனாவால் இந்தியாவில் சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்,
அதிலும் குறிப்பாகக் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மட்டும் 1.17 லட்சம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 93%ஆகும். ஒட்டுமொத்தமாக பெருந்தொற்று தொடங்கியது முதல் பதிவான கொரோனா உயிரிழப்புகளில், இது 42.72% ஆகும்.
மே மாதத்தில் வெறும் 17 நாட்களிலேயே 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 44% அதிகமாகும்.
கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் 1.02 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போதஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.49 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஆண்டில் வைரஸ் பாதிப்பு 143% அதிகரித்துள்ளது.
இருப்பினும், தற்போது நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நேற்று மட்டும் இந்தியாவில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும்.