நம்பிக்கை அளித்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவிலும் பரிசோதிக்க.. சீரம் நிறுவனம் முடிவு
டெல்லி: ஆக்ஸ்போர்டு தயாரித்த தடுப்பூசி கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை தயாரிக்க அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனம் விரைவில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்கப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முதல் தொகுப்பு முடிவுகள் லான்செட் என்ற மருத்துவ இதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா தடுப்பில் உலகில் மிகப்பெரிய சாதகமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வேக்சின்.. ஒரு ரூபாய் லாபம் வேண்டாம்.. உலக மக்களுக்காக ஆக்ஸ்போர்ட் எடுத்த அதிரடி முடிவு.. செம
விரைவில் தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசி சோதனையில் வெற்றி பெற்றால் ஒரு பில்லியன் அளவை உற்பத்தி செய்ய பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. எனவே ஆக்ஸ்போர்டின் முடிவுகளைத் தொடர்ந்து இந்திய தடுப்பூசி உற்பத்தி நிறுவமான சீரம் நிறுவனம் இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளுக்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறுவதாகவும் "விரைவில் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்குவதாகவும்" அறிவித்துள்ளது.
விரைவில் சோதனை
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா இதுபற்றி கூறுகையில், "சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன ... ஒரு வார காலத்திற்குள் நாங்கள் இந்திய ஒழுங்குமுறைக்கு உரிம சோதனைகளுக்கு விண்ணப்பிப்போம். ஒப்புதல்கள் கிடைத்தவுடன் சோதனைகள் தொடங்கும் என்றார்.
யாருக்கு முன்னுரிமை
ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வலுவான ஆன்டிபாடி மற்றும் நோய் எதிர்ப்பு செல்களை கொண்டிருப்பதாகவும், ஆனால் சில பக்க விளைவுகள் உள்ள போதிலும் கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் இதுபற்றி கூறும் போது, "எங்கள் தடுப்பூசி பயனுள்ளதாக இருந்தால், இந்த வகையான தடுப்பூசிகளை பெரிய அளவில் தயாரிக்க முடியும் என்பதால் இது ஒரு நம்பிக்கைக்குரிய வழி. கொரோனாவிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான தடுப்பூசி முழு மக்கள் தொகையிலும் தொற்று, நோய் மற்றும் இறப்பைத் தடுக்க பயன்படுத்தப்படலாம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் வயதானவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள மக்கள் தடுப்பூசி பெற முன்னுரிமை அளிப்பார்கள்" என்றார்.
எவ்வளவு பாதுகாப்பானது
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியின் கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், கொரோனாவின் ஸ்பைக் புரதத்தை குறிவைத்து நோய் எதிர்ப்பு செல்கள் நல்ல பதில் அளித்துள்ளன, எனினும் இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு பாதுகாப்பானது மற்றும் எவ்வளவு காலம் பாதுகாப்பு நீடிக்கும் என்பது குறித்து விரிவான ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்த உள்ளார்கள்.
தடுப்பூசி தயாரிப்போம்
முன்னதாக, சீரம் நிறுவனம் ஒரு நேர்காணலில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சில நூறு நோயாளிகளுக்கு மே மாதத்தில் சோதனைகளைத் திட்டமிடுவதாகவும், சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்குவோம் என எதிர்பாக்கிறோம் என்று கூறியிருந்தது. சீரம் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசியை (அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டால்) விநியோகிக்கும். என்று தெரிகிறது.