எல்லையில் சீனா ஊடுருவவில்லையா.. அப்படீன்னா சண்டை எதுக்கு நடந்துச்சு.. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
டெல்லி: இந்திய எல்லையில் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது உண்மையெனில் மே 5,6 தேதிகளில் நடந்த பிரச்சினை என்ன என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் கடந்த திங்கள்கிழமை இந்தியா- சீனா ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா அளித்த பதிலடியில் சீனா தரப்பை சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். இதில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட 20 கட்சிககளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் கூறுகையில் நமது நிலத்தின் ஒரு அடி நிலத்தை கூட சீனா எடுத்துச் செல்ல விடமாட்டோம். சீனா ஊடுருவவில்லை. அந்த ராணுவத்தினரால் எந்த ஒரு இந்திய முகாமும் கைப்பற்றப்படவில்லை.
|
ட்விட்டர்
20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நமது பாதுகாப்பு படையினர் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளனர் என மோடி தெரிவித்தார். இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு ட்விட்டரில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வம்பு வளர்த்தது ஏன்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்புகையில், இந்திய மண்ணில் எந்த வெளிநாட்டினரும் (சீனா) ஊடுருவவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அது உண்மையெனில் மே 5- 6 -ஆம் தேதிகளில் சீனா தேவையில்லாமல் வம்பு வளர்த்தது ஏன்? அன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது?

சண்டை ஏன்
ஜூன் 16-17 தேதிகளில் துருப்புகளிடையே சண்டை நிகழ்ந்தது ஏன், இந்தியாவில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தது ஏன். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த ஊடுருவலும் அத்துமீறலும் நடக்கவில்லை எனில் இரு தரப்பினரும் எல்லையில் குவித்த படைகளை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடந்தது ஏன்?

சரமாரி கேள்வி
சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நற்சான்று கொடுக்கிறாரா? அப்படியெனில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னவிருக்கிறது? மேஜர் ஜெனரல்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே அதற்கு என்ன அர்த்தம்? என ப சிதம்பரம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications