மோடி, அமித்ஷா, என் மீது பொய்வழக்குப் போட்டவர்தானே ப.சிதம்பரம்- நிதின் கட்காரி காட்டம்
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்மீதும் மோடி, அமித்ஷா ஆகியோர் மீதும் பொய் வழக்குகளை தொடர்ந்தார் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த இருவழக்குகளிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டி:

பொய் வழக்கு போட்ட ப.சி.
மத்திய பாஜக அரசு ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது என் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டன.

நிரபராதிகள் என நிரூபித்தோம்
அதேபோல் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் நாங்கள் நிரபராதிகள் என நிரூபித்து இருக்கிறோம்.

ப.சிக்கு எதிராக ஆதாரங்கள்
ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்குகளில் ஆதாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்குகள் இருக்கின்றன. ஆகையால் நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.

ஜார்க்கண்ட்டில் மீண்டும் பாஜக
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் மீண்டும் ஆட்சியில் அமருவார். அரசுக்கு எதிரான அலை என்பது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இல்லை.

காங்கிரஸ் வெல்லாது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இம்முறை துடைத்து எறியப்படும். காங்கிரஸும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து போட்டியிடுவது என்பதே பாஜக பலமாக இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications