பெஹல்காம் தாக்குதலின் ஈரம் காய்வதற்குள் வேலையை தொடங்கிய பயங்கரவாதிகள்! 2 பேரை சுட்டு கொன்றது ராணுவம்
ஸ்ரீநகர்: பெஹல்காம் தாக்குதல் நடந்து சில மணி நேரத்திற்குள் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தாலும், பெஹல்காம் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் பெஹல்காம். இங்கு புகழ்பெற்ற துலியன் ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரிக்கு போகவேண்டும் எனில், முதலில் பெஹல்காமிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியான பைசாரனுக்கு போக வேண்டும். இங்கு போவதற்கு வாகன ஏற்பாடுகள் ஏதும் கிடையாது. நடந்தோ அல்லது குதிரை மீது ஏறியோதான் போக வேண்டும். இங்குதான் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
மொத்தம் 26-28 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன் பயணிகள் அங்குமிங்கும் ஓடியிருக்கிறார்கள். ஆனால், பைசாரன் திறந்த புல்வெளி பகுதி என்பதால் அவர்களால் ஒளிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.
அதேநேரம் இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் பாராமுல்லா பகுதியில் ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு ஊடுருவல்காரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாராமுல்லா மாவட்டம் உரி நாலா எனும் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பெஹல்காம் தாக்குதலின் ஈரம் காய்வதற்குள் ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இந்த ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்கிற கோணத்தில் ராணுவம் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
பெஹல்காம் தாக்குதல், அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஊடுருவல் முயற்சி ஆகியவை ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications