பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி காரணமா? சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ ஹூடா விளக்கம்!
டெல்லி: துல்லியமான திட்டமிடலும், உளவுத்துறை முன்கூட்டியே தாக்குதலை கணிக்காமல் விட்டதும்தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று முன்னாள் வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரலும், 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோவுமான தீபேந்திர சிங் ஹூடா கூறியிருக்கிறார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பாக உளவுத்துறையின் தோல்வியே தாக்குதலுக்கான முக்கிய காரணம் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்றிருக்கிறது. பஹல்காமிலிருந்து பைசரன் வருவதற்கு வாகன ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. குதிரைகள் மூலமாக மட்டுமே வர முடியும். இதனை தெரிந்துக்கொண்ட பயங்கரவாதிகள், உதவி கிடைக்க நேரம் ஆகும் என்பதை உணர்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இது லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாகும். இவை அனைத்தும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் மீது எடுக்கப்பட வாய்ப்புள்ள நடவடிக்கைகள் பற்றியும் ஹூடா கூறியுள்ளார். "நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாதத்தை சமாளிக்கவும் நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. இந்த வழிகளை செயல்படுத்துவதற்கு முன்னர் சரியாக திட்டமிட வேண்டும். தாக்குதல் அல்லாமல் நம்மால் பழிவாங்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
உதாரணத்திற்கு பாகிஸ்தானுக்கு பொருளாதார தடைகளை விதிப்பது. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வர்த்தக உறவுகள் இல்லை. எனவே பொருளாதார தடை என்பது பலன் கொடுக்காது.
இரண்டாவது ஆப்ஷன், பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவது. ஏற்கெனவே ஐநா மூலமாக இந்தியா இதை செய்ய முயற்சித்திருக்கிறது. ஆனால் சீனா நம் முயற்சியை தடுத்துவிட்டது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நற்பெயர் இல்லை.
பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஜம்மு பகுதியிலிருந்து 100 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ஏற்கெனவே அம்மாநில டிஜிபி அறிவித்திருந்தார். இந்த தாக்குதல் மூலம் பாதுகாப்பு அமைப்புகள் விழிப்படைய வேண்டும்.
தீவிரவாதிகள் பொதுவாக சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஏனெனில் எந்த நிலத்தை அவர்கள் உரிமை கோருகிறார்களோ, அந்நிலத்தின் மக்களின் ஆதரவு அவசியம். சுற்றுலா பயணிகளை தாக்குதவன் மூலம் இந்த ஆதரவு கிடைக்காது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் இந்த முறை சுற்றுலா கடுமையாக பாதிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ ஹூடா:
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் உரியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வசம் உள்ள பூஞ்ச் மற்றும் முசாஃபராபாத் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. இதற்காக சிறப்பு படைகள் அனுப்பப்பட்டன. ஹூடா தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஸ்ட்ரைக் வெற்றிகரமாக நடத்தியும் முடிக்கப்பட்டது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 10 நாட்களில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. எனவே ஹூடா சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications