பஹல்காம் வெறும் தொடக்கம்தான்.. தீவிரவாதிகளின் திட்டமே வேறு - வெளியுறவு செயலாளர் அதிர்ச்சி
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மீது மேலும் சில தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தலாம் என உளவுத் துறை தகவல் தெரிவித்தன. இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்தியது மிகவும் காட்டு மிரண்டித்தனமானது. அதில் பலரும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் அருகில் வைத்தே நெற்றிப் பொட்டில் சுடப்பட்டுள்ளனர். அவர்கள் உறவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து, அவர்கள் மூலம் பயத்தை கொடுக்க தீவிரவாதிகள் திட்டமிட்டனர்.

உலகம் முழுவதும் சொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் அவர்களை மிரட்டி அனுப்பினார்கள். இதை சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்தத் தாக்குலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தீவிரவாத நடவடிக்கைகளை உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
உளவுத்துறை மூலம் இங்குள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுடனான தொடர்பை கண்டறிந்தோம். தீவிரவாதிகள் இந்தியாவில் மேலும் சில தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை தீவிரவாத உள்கட்டமைப்பை வேரோடு அகற்றும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எல்லாம் அழுத்தம் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாகியும், தங்கள் மண்ணில் இருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் அமைப்பு தான் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அவர்களுக்கு லஸ்கர் இ தொய்பாவுடன் நேரடி தொடர்புள்ளது.
நேரில் இருந்த சாட்சிகள் வாக்குமூலம் மற்றும் எங்கள் விசாரணை அமைப்புகள் மூலம் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அதன் பின்னணியில் இருப்போர் என்று அந்த அமைப்பில் உள்ள அனைவரின் தெளிவான உருவப்படங்களை உருவாக்கியுள்ளோம்.
இது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலுடன் ஒத்துப் போகிறது. ஜம்மு காஷ்மீரின் அமைதி, சமூக முன்னேற்றத்தை சீர்குலைப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம். தீவிரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக அவர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications