பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது.. பயங்கரவாதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.. சூளுரைத்த மோடி
டெல்லி: பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீரில் சகஜ நிலை திரும்ப பயங்கரவாதிகள் விரும்பவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசினார். மோடி பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க பயங்கரவாதிகள் விரும்பவில்லை. சகஜ நிலைக்கு காஷ்மீர் திரும்புவதை விரும்பாத பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீர் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பதையும், காஷ்மீரை அழிக்க நினைப்பதையும் காட்டுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இது அவர்களது கோழைத்தனத்தை தான் காட்டுகிறது.
எனினும் இதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 140 கோடி மக்களும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications