களமிறங்கிய ராஜ்நாத் சிங் - அமித்ஷா.. காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வரும் நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமாக பஹல்காம் உள்ளது. இங்குள்ள புல்மேடு பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் நிறையபேர் சென்றனர். அப்போது 4 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

விட்டுவிடும்படி கெஞ்சியும் கூட மனம் இரங்காமல் அப்பாவி மக்களை இந்த பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆனாலும் பலரும் எச்சரிக்கையாக சம்பவ இடத்தில் இருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக சவூதியில் இருந்து இந்தியா திரும்பி டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு நேற்று பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் ரத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்கள் குறைப்பு, 48 மணிநேரத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாகா -அட்டாரி எல்லையை மூடுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பஹல்காம் தாக்குதல், இந்தியா கையில் எடுக்கும் பதிலடி நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது
முன்னதாக நேற்றைய தினம் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா ஆகியோர் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது நாட்டின் முப்படைகளும் உஷார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் பாகிஸ்தான் மீது நம் நாடு பதிலடி தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications