'பிரிக்கப்படாத இந்தியா' கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான்! ஆனால் யோசிக்கும் வங்கதேசம்! பின்னணி
டெல்லி: இந்திய வானிலை மையம் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அதைக் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்கப் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதைப் பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் வானிலை என்பது கணிக்கவே முடியாத அளவுக்குச் சிக்கலானதாக மாறி வருகிறது. அதீத வெயில் மற்றும் அதீத மழை போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இதனால் உடனுக்கு உடன் வானிலை குறித்த அறிவிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாக இருக்கிறது. நமது நாட்டில் வானிலை தொடர்பான தகவல்களை இந்தியா வானிலை ஆய்வு மையம் தான் நமக்கு வழங்கி வருகிறது.
வானிலை மையத்தின் 150 ஆண்டுகள்:
இதற்கிடையே இந்த வானிலை மையம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பிரிக்கப்படாத இந்தியா (undivided India) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதைப் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை ஒற்றுமையாகக் கொண்டாட ஒரு முயற்சியாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியத் துணைக் கண்டம் தவிர, மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்:
இந்த கருத்தரங்கில் பங்கேற்பதைப் பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. அதேநேரம் வங்கதேசம் இதுவரை பங்கேற்பதை உறுதி செய்யவில்லை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வங்கதேசமும் இந்த கருத்தரங்கில் பங்கேற்குமானால் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமையும்
இது தொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், "இந்திய வானிலை மையம் முதலில் நிறுவப்பட்ட போது இந்தியா பிரிக்கப்படவில்லை. அந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து நாடுகளின் அதிகாரிகளும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதற்காகவே அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மத்திய அமைச்சகங்கள்:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் கைகோர்த்துள்ளன. நிதி அமைச்சகம் சார்பில் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ரூ.150 நினைவு நாணயத்தை வெளியிட உள்ளது. வானிலைத் துறையின் 150 ஆண்டு சாதனையைக் குறிக்கும் வகையில் குடியரசு தின அணி வகுப்பில் சிறப்பு வாகனத்திற்கு உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.
வானிலை மையம்:
நமது நாட்டின் வானிலை ஆய்வு மையங்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்டது. கொல்கத்தாவில் 1785ம் ஆண்டிலும் சென்னையில் 1796ம் ஆண்டிலும் மும்பையில் 1826ம் ஆண்டிலும் அடிப்படை ஆய்வகம் அமைக்கப்பட்டது. இருந்தாலும் காலநிலையைக் கண்காணிப்பதில் பிரச்சினை இருந்தது. குறிப்பாகக் கொல்கத்தாவில் 1864ம் ஆண்டு மிகப் பெரிய சூறாவளி ஏற்பட்டது. தொடர்ந்து 1866 மற்றும் 1871ம் ஆண்டுகளில் கொட்டி தீர்த்த பருவமழையும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே வானிலையை நாடு முழுக்க கண்காணிக்க ஜனவரி 15, 1875ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இதன் தலைமையகம் கொல்கத்தாவில் இருந்தது. பிறகு 1905 சிம்லாவிற்கும், 1928இல் புனேவிற்கும் தலைமையகம் மாற்றப்பட்டது. கடைசியில் 1994ம் ஆண்டு டெல்லிக்கு இதன் தலைமையகம் மாற்றப்பட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி இதன் கொண்டாட்டமே நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications