வானில் ஒளிப் புள்ளி.. அடுத்த நிமிடமே வெடிச் சத்தம்.. பாகிஸ்தான் ராணுவத்தை கதற விடும் இந்தியா!
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சம்பா, உத்தம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில், இந்திய ராணுவம் அவற்றை நடு வழியிலேயே அழித்து வருகிறது. வானில் ஒளிப் புள்ளி தோன்றுவதும், வெடிச் சத்தமும் விடாமல் தொடர்ந்து வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவம் நேற்று காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லை ஒட்டிய பகுதிகளில் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.உடனடியாக ராணுவம் அதனை தாக்கி அழித்தது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி அளிக்கப்படும் எனவும் இந்தியா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. மேலும் காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.
இன்றும் ஜம்மு காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து சிறிய வகை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மூன்றாவது நாளாக எல்லையோரப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் டிரோன்களை வீசி தாக்கி வருகிறது. உடனடியாக, இந்தியா அதனை இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது.
இந்தியா மீது 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், ரேடார் அமைப்பில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானில் ஒளிப் புள்ளி தோன்றுவதும், அதைத்தொடர்ந்து, வெடிச் சத்தமும் கேட்டு வருகின்றன. டிரோன்கள் வானில் தோன்றியதும் இந்திய ராணுவம் அதனை வீழ்த்தி வருகிறது. இதனால் ஜம்மு பகுதியில் இடைவிடாமல் வெடிச்சத்தம் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சைரன் ஒலிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications