நீதிபதி வீட்டில் பணம்! யார் யாரிடம் பேசினார்கள்? விசாரணை வளையத்திற்குள் வரும் தீயணைப்பு துறை
டெல்லி: ஹோலி பண்டிகை அன்று டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் இருந்தது. இது தொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில், சம்பவம் நடந்த நாளில் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு துறை வீரர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களது செல்போன்களின் கால் ரெக்கார்டுகள் குறித்து ஆய்வு நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை அன்று இவரது அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது வீட்டில் யஷ்வந்த் வர்மா இல்லை. அந்த நாளில் அவர் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் அவரது உதவியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது நீதிபதி வீட்டில், பழைய பொருட்கள் வைக்கும் அறையில் தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தபோது அங்கு சில மூட்டைகள் தீயில் எரிந்த படி கிடந்தன. அதிலும் தண்ணீரை ஊற்றி முழுவதுமாக அணைத்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக பணத்தாள்கள் எரிந்த நிலையில் கிடந்தன.
4 அல்லது 5 சாக்கு மூட்டைகளில் எரிந்த நிலையில் கத்தை, கத்தையாக பணம் இருப்பதனை வீடியோவாக எடுக்கப்பட்டது. நீதிபதி ஒருவர் வீட்டில் கத்தை கத்தையாக பணம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து எரிந்த நிலையில் பணம் இருக்கும் வீடியோவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வெளியிட்டனர்.
எனினும் இது உறுதிபடுத்தப்படவில்லை என்றும், பணம் எரிந்த நிலையில் இருந்தது தொடர்பாக என் உதவியாளரிடம் காட்டப்படவில்லை என்றும் யஷ்வந்த வர்மா கூறியிருந்தார். எனினும் இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இது தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டில் இருந்து வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது தீ அணைப்பு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் நிகழ்விடத்திற்கு போன தீ அணைப்பு அலுவலர்களின் அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த விசாரணைக் குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நீதிபதியிடம் முறையான விளக்கம் கோரவும் தீ அணைப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் அவர்களின் கால் ரெக்கார்டுகள் குறித்து தடயவியல் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க், நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் தீயணைப்பு பணியின்போது, தீ அணைப்பு வீரர்கள் பணம் எதுவும் பார்க்கவில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவர் பிறகு மறுத்தார். பணம் எதுவும் பார்க்கவில்லை என்று தான் ஒருபோதும் கூறவில்லை எனக் கூறினார். இத்தகைய சூழலில்தான் ஸ்பாட்டில் இருந்த தீ அணைப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications