அதானி மீது குற்றச்சாட்டு.. விவாதத்திற்கு மறுத்த மத்திய அரசு! நாடாளுமன்றம் முடங்கியது
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இன்றும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், மத்திய அரசு அனுமதி மறுத்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
சூரிய மின்சாரம் தயாரிப்பது, அதை விற்பனை செய்யும் வணிகத்தில் உயர் அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை எழுப்பியது. அவருக்கு எதிரான பிடி ஆணையும் பிறப்பித்திருந்தது. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி மீது எழுந்த குற்றச்சாட்டுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்போது அமெரிக்க நீதிமன்றமும் குற்றம்சாட்டியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கண்டென்டாக அமைந்துவிட்டது.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து கோரப்படும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதேபோல கூட்டத்தொடர் தொடங்கிய உடன் எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கை முன்வைத்து ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.
எனவே தொடர்ந்து முழக்கங்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பியிருந்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இன்றும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்ப, வழக்கம்போல மத்திய அரசு அனுமதி மறுத்தது. எனவே, எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். எனவே மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாகவும், மாநிலங்களவைநாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications