இந்தியாவை இரு நாடுகளாக கூறுபோட்ட வீர சாவர்க்கர்.. இந்து ராஷ்டிராவா? விளாசிய ஆ.ராசா! கொந்தளித்த பாஜக!
டெல்லி: இந்தியாவை இரண்டு நாடுகளாக பிரித்து கூறு போட்டது ஜின்னா அல்ல, வீர சாவர்க்கர்தான் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக சாடினார். நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்தியாவின் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததே காங்கிரஸ் அரசுதான் என குற்றம் சாட்டினார்.
நாட்டின் அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முதல் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று எம்பிக்கள் பேசியதன் தொகுப்பு:
மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ: இந்தியாவின் அரசியல் சாசனம் மிகப் பெரியதானது மட்டுமல்ல.. மிகவும் அழகானது; அனைவரையும் உள்ளடக்கியதுதான் நமது அரசியல் சாசனம். நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் பாஜக ஆட்சிக் காலங்களில்தான் நாட்டின் பெருநிலப்பரப்புடன் இணைக்கப்பட்டன.
திமுக எம்பி ஆ.ராசா: பாஜக 400 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தைத் திருத்துவோம் என்று சொன்னது பாஜகவின் துணைத் தலைவர்தான். அப்படி அரசியல் சாசனத்தை திருத்தி இந்தியாவை இந்துராஷ்டிராவாக பிரகடனப்படுத்துவோம் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்தியாவை இரு நாடுகளாக கூறு போட்டது ஜின்னா அல்ல; வீர சாவர்க்கர்தான். 1924-ம் ஆண்டே வீர சாவர்க்கர்தான் இரு நாடுகள் குறித்து பேசியும் எழுதியும் இருக்கிறார். (ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஆர்ஜேடி எம்பி சுதாகர் சிங்: நமது நாட்டின் அரசியல் சாசனமானது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தக் கூடிய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் சாசனத்தை பல்வீனப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு. தேர்தல் பத்திரங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்து நாட்டின் அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்தியது மத்திய அரசுதான்.
பப்பு யாதவ்: அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75-வது ஆண்டை கொண்டாடும் தருணத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாம் ஆலோசிக்க வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா: இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே காங்கிரஸ்தான். 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தந்ததே அன்றைய காங்கிரஸ் அரசுதான்.












Click it and Unblock the Notifications