“ஈகோ” கற்களால் நாடாளுமன்றம் கட்டப்படவில்லை.. குடியரசுத் தலைவரையே அவமதிப்பதா? குமுறும் ராகுல் காந்தி
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைத்து திறக்காதது இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியையே அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் பல நூறு கோடி செலவில், நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் வரும் மே 28 ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி இருக்கும் அழைப்பில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற புதிய வளாகத்தை திறந்து வைப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசியலமைப்பின் உயரிய பொறுப்பில் இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வைத்து புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வைத்து திறக்கப்படதாத இந்த நாடாளுமன்ற புதிய வளாக திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு உள்ளனர்/

அதில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது, "குடியரசுத் தலைவர் என்பவர் வெறும், இந்திய அரசின் தலைவர் மட்டுமல்ல. அவரும் நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார். முன்னுரை மற்றும் உரையாற்றுகிறார்.
எனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தை திறந்து வைக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டு வருகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராகுல் காந்தி, "நாடாளுமன்றம் என்பது அரசியலமைப்பின் மாண்புகளை கொண்டு கட்டப்பட்ட ஒன்றாகும். வெறும் ஈகோ நிறம்பிய செங்கற்களை கொண்டு அது கட்டப்பட்டது கிடையாது. நாடாளுமன்ற புதிய வளாகத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காது நாட்டின் உயரிய அரசியல் அமைப்பு பதவியை அவமதிக்கும் செயல்." என்று விமர்சித்து உள்ளார்.
காங்கிரஸ், திமுக, விசிகவை கடந்து ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், புரட்சிகர சோசியலிச கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.












Click it and Unblock the Notifications