மணிப்பூர் பெண்களின் நிர்வாண வீடியோ.. நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ்! அடுத்து என்ன
டெல்லி: மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் இரு சபைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதுபற்றி விவாதிக்க தமிழக எம்பி உள்பட பலர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல் உள்ளது. இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் நேற்று வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் செய்தாலும் கூட இன்னும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதிக்க முடிவு செய்துள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதற்கிடையே தான் இன்று மழைக்கால கூட்டத்தொடருக்கான முதல் நாள் கூட்டம் தொடங்கும் நிலையில் பல்வேறு கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
அதாவது நாடாளுமன்றத்தை இன்று ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த விருதுநகர் காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதேபோல் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் எம்பி இம்ரான் பிராதப்கிரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் எம்பி ஒருவர் என மொத்தம் 3 பேர் மாநிலங்களையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications