தொடர் அமளி - ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடு கண்ணீர் - லோக்சபா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
எதிர்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக லோக்சபா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி: எதிர்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக லோக்சபா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் எம்பிக்கள் சிலர் மேஜை மீது ஏறி நின்று அமளியில் ஈடுபட்டதால் அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாக கூறி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே அமளி, துமளி ஆர்பாட்டம், எதிர்ப்பு என இரு அவைகளிலும் கூச்சம் குழப்பம் நிலவியது.
பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு பெரும் புயலை கிளப்பியது. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.

ஓபிசி மசோதா
இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவ்வாறு விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரின் போது ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் நிறைவேற்றப்பட்டது.

மேஜை மீது ஏறி அமளி
நேற்றைய கூட்டத்தொடரின் போது தான் எம்.பிக்கள் மேஜை மீது ஏறி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் நிறைவேற்றப்பட்டது.

17 நாட்களாக அமளி
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 17வது நாளாக இன்றும் லோக்சபாவில் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபடவே அவையை 2 நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

புனிதம் கெட்டு விட்டது
ராஜ்யசபாவில் எதிர்கட்சியினர் அமளியால் முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உருக்கமாக பேசினார். வழிபாட்டு தலம் போன்ற புனிதமான மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்க தவறிவிட்டதாக கூறிய வெங்கையா நாயுடு கண்ணீர் சிந்தினார்.

எம்பிக்கள் மீது நடவடிக்கை
எம்பிக்கள் சிலர் மாநிலங்களவை மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதை குறிப்பிட்டு வெங்கையா நாயுடு பேசிய போது அவரது கண்கள் கலங்கின. நா தழுதழுக்க மிகவும் உருக்கமாக கண்ணீர் மல்க அவர் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்கட்சிகள் மீண்டும் முழக்கம் எழுப்ப தொடங்கினர். இதனையடுத்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவையில் அமளியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications