நாடாளுமன்றம்: புயலை கிளப்பிய நாகாலாந்து விவகாரம்- ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிப்பு
டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் 14 பொதுமக்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கூச்சல் குழப்பம் நிலவியதால் ராஜ்யசபா நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன.
நாகாலாந்து மாநிலத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாகாலாந்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் ராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ராணுவ முகாம்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

144 தடை உத்தரவு
இதனைத் தொடர்ந்து நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகாலாந்து முழுவதும் செல்போன் இண்டர்நெட் சேவைகள், பல்க் எஸ்.எம்.எஸ். சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 14 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர்கள் மீது நாகாலாந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராணுவம் வருத்தம்
பொதுமக்கள் படுகொலை தொடர்பாக விசாரணைக் குழுவை நாகாலாந்து மாநில அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என கூறியிருந்தார். இப்படுகொலை சம்பவங்களுக்கு ராணுவமும் வருத்தம் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில்...
இதனிடையே நாகாலாந்து படுகொலை சம்பவம் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் புயலைக் கிளப்பி உள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவசாய சட்டங்கள் ரத்து மசோதா மீது விவாதம் நடத்த கோரியும் ராஜ்யசபாவில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
இந்நிலையில் நாகாலாந்து சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பிக்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி எம்.பிக்கள் சுகேந்து சேகர் ராய், மனோஜ் ஜா ஆகியோரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். நாகாலாந்து பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ராஜ்யசபா ஒத்திவைப்பு
இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் இப்பிரச்சனையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பினர். ராஜ்யசபாவில் இதனால் கூச்சல் குழப்பம் நீடித்தது. நாகாலாந்து விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியதும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடிய போதும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications