நாடாளுமன்றத்தில் இன்று: மாநிலங்களவையில் தாக்கலாகிறது செயற்கை முறை கருத்தரித்தல் மசோதா
டெல்லி: செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. விவசாயிகளின் உயிர்களை காவு வாங்கிவிட்டு, அவர்களை துயரத்துக்குள்ளாக்கிவிட்டுத்தான் இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும ஓராண்டு போராட்டத்திற்கு பிறகு அந்த மசோதாவை ரத்து செய்தது ஏன் என்பது குறித்தும் விவாதம் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளே அமளியில் ஈடுபட்டன.
அவை தொடங்கிய முதல் மூன்று 3 நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த முறை 12 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பாதியில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரு நாட்கள் கழித்து இன்று மீண்டும் கூடுகிறது. கடந்த 2ஆம் தேதி செயற்கை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். அது போல் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த செயற்கை கருத்தரித்தல் மசோதா படி இனி அனைத்து கருத்தரிப்பு சிகிச்சை மையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். கருமுட்டைகள், விந்தணுக்கள் தானம் செய்வோருக்கான அடிப்படை தகுதி, அவர்கள் எத்தனை முறை தானம் வழங்கலாம் போன்றவைகளும் இந்த மசோதாவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த இரு மசோதாக்களும் இன்று ராஜ்யசபாவில் தாக்கலாகிறது.
ராஜ்யசபா:
செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் பேசுகிறார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடலாம் என தெரிகிறது. இதனிடையே பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இன்று அவையில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து வியூகம் வகுப்பர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications