விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் யாரும் பலியாகவில்லை.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
டெல்லி: விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் யாரும் பலியாகவில்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் நாடாளுமன்ற லோக்சபா அவையில் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாம் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் மூன்றும் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. விவாதம் எதுவும் இன்றி இரண்டு அவைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக அவையில் இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இன்றும் விவசாய போராட்டம் குறித்தும், விவசாய சட்டம் நீக்கம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கை விடுத்தனர்.
12 எம்பிக்கள் சஸ்பெண்ட் அமளி.. ஓமிக்ரான் பரவல் பற்றி விளக்கம் -நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
கேள்வி
இந்த நிலையில் இன்று லோக்சபா அவையில் காங்கிரஸ் அவைத்தலைவர் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விவசாய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். விவசாய போராட்டத்தின் போது 700க்கும் அதிகமான விவசாயிகள் பலியானார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்கள் குறித்த விவரங்களும் அரசு தரப்பிடம் முழுமையாக இல்லை.
நிவாரணம்
இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கேள்வி எழுப்பினார். இதற்கு விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் அவையில் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில், விவசாய போராட்டத்தில் விவசாயிகள் யாரும் பலியாகவில்லை.
கடிதம் பதில்
விவசாயிகள் யாரும் பலியாகாத காரணத்தால் அது குறித்த டேட்டா இல்லை. விவசாயிகள் யாரும் பலியாகாத காரணத்தால் அதை பற்றி இப்போது அவையில் கேள்வி எழுப்ப வேண்டியது இல்லை. இப்போது விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன, என்று அமைச்சர் விளக்கத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து விவசாய சட்டம் வாபஸ் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபா
இன்னொருபக்கம் ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எம்பிக்கள் அமளி செய்தனர். ராஜ்ய சபா, லோக்சபா நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை தொடர்ந்து லோக்சபா 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.