அதானி விவகாரத்தில் மௌனம்! வாயை திறக்காத செபி தலைவர் மீது நாடாளுமன்ற குழு விசாரணை தொடக்கம்
டெல்லி: அதானி பங்கு சந்தையில் ஏராளமான முறைகேடுகளை செய்திருக்கிறார் என, ஹிண்டன்பர்க் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியது. ஆனால், இது குறித்து விசாரிக்க வேண்டிய செபி சாதித்து வந்தது. இப்படி இருக்கையில், அதானிக்கு ஆதரவாக செபி தலைவர் செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை தொடங்கியுள்ளது.
அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருந்தது.

செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்குகளை உயர்த்த பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதானி குறித்து முதன் முதலில் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியபோது, உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. செபிதான் இந்த விசாரணையை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் விசாரணையை மேற்கொண்ட செபி, "அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லீங்க ஐயா" என்கிற டோனில் அறிக்கையை அளித்தது. இதனால் அதானி விவகாரம் அப்படியே அடங்கிவிட்டது.
இதற்கிடையில் சும்மா இல்லாத ஹிண்டன்பர்க், என்னோட அறிக்கையை தப்புனு சொல்றீங்களா? செபிக்கும் இதுல தொடர்பு இருக்கு, இந்தா பார்த்துக்கோங்கனு.. இரண்டாவது குற்றச்சாட்டை எழுப்பியது.
இதில், "செபி தலைவரும், அவரது கணவரும் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்கு மோசடிக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய பங்கு சந்தை என்பது ரூபாய் 25 லட்சம் கோடி முதல் ரூபாய் 30 லட்சம் கோடி வரை சந்தை மதிப்பு கொண்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு செபி அமைப்பிற்கு இருக்கிறது. இப்படி இருக்கையில் முதல் குற்றச்சாட்டில், அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏற்கெனவே செபி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மறுபுறம் ஹிண்டன்பர்க் ஒன்னும் சும்மா குற்றச்சாட்டை வைக்கும் அமைப்பு கிடையாது. இது இரண்டும் எங்கோ இடிக்கிறதே என்று கூறி வந்த எதிர்க்கட்சிகள்.. தற்போது செபி தலைவர் பக்கம் திரும்பியுள்ளன.
செபி அமைப்பே அதானி நிறுவனத்தோடு சேர்ந்து கொண்டு லாப நோக்கில் செயல்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உச்சநீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டை தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலமாக விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
இதனையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்கு குழு, தனது விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications